மு.செல்வராசன்
ஒருவர் கடந்து
வந்த பாதையிலே கூட நடந்து சென்ற அனுபவம் நமக்கே ஒரு தனிப்பாதை அமைக்க
வழிகாட்டிவிடும்.திட்டமிட்டு அல்ல. இயல்பாக.அப்படிச் சிலரோடு நான் கூட நடந்து சென்றிருக்கிறேன்.
சிலரை வழிநடத்தியிருக்கிறேன். சிலரால் வழிநடத்தப்பட்டிருக்கிறேன்.கடந்து வந்த பாதையிலே என்று ஒரு நூல் எழுதிய
அமரர்.மு.செல்வராசன் தமது சொந்தப் பதிப்பக வாழ்க்கை தொடங்குமுன் எத்தனையோ ஏற்றஇறக்கங்களைக் கண்டவர். பதிப்பக
வாழ்க்கையின் முனைப்பான தருணத்தில் தான் கடந்து வந்த பாதையிலே என்ற நூலை எழுதினார் .அன்று எனக்கும்
அவருக்கும் உள்ள உறவு பதிப்பாளர்- எழுத்தாளர் உறவு தான்.
அவர்
பதிப்பாளர். நான் எழுத்தாளர்.
அவருக்கும்
எனக்குமிடையே தொடர்புகளில் முக்கியமானது
அவரும் நானும் அன்றைய வடஆற்காடு மாவட்டத்தைச் சேர்ந்த வாணியம்பாடி
நகருக்கும் அதற்கு 11 கிலோமீட்டர் தொலைவிலிருந்த
வெள்ளக்குட்டை கிராமத்திற்கும் இருந்த நெருக்கம் தான். அவர் வாணியம்பாடியில்
பிறந்து வளர்ந்து அங்கேயே பள்ளிஇறுதித் தேர்வு வரை படித்தவர். நான்
வெள்ளக்குட்டையிலே பிறந்து சென்னைக்கு வந்து சென்னைப்பள்ளிகளிலே பள்ளிஇறுதித்
தேர்வு படித்தவன். நான் அவரை
எழுத்தாளராகவோ,பதிப்பாளராகவோ சந்திக்கவில்லை.வேலூரில்
பணியாற்றிய என் தம்பி கவிஞர் வசந்தராஜன் வசித்த சுந்தரேசசாமி கோயில் தெருவில் ஒரு
விடுமுறையில் நான் தம்பி வீட்டிற்குச்சென்றிருந்த போது அவரைச்சந்தித்தேன். வைரம் பதிப்பகத்தின் வாடகை நூலகத்தில் தகழி எழுதிய செம்மீன் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பைக்கண்டு
அந்தக்கடையில் வாடகைக்கு வாங்கப்போய்த்
தான் சந்தித்தேன்.
அப்போது அவர்
சென்னையில் வசித்தார். நான் வெள்ளக்குட்டையில் வசித்தேன். அப்போது அவர் பதிப்பாளர்
ஆகவில்லை. ஊரூராகப் பள்ளிகளுக்குச் சென்று
நூல்களை விற்பனை செய்யும் வைரம் பதிப்பகத்தின் விற்பனையாளராக இருந்தார். அப்போதே அவருக்கு திராவிட இயக்கத்தின் பேரில்
இருந்த ஈடுபாடோ வடாற்காடு மாவட்டத்தின்
முக்கியப் பிரமுகராக விளங்கிய முல்லைசத்தி
நடத்திய அச்சகத்தோடு இருந்த தொடர்போ
எனக்கு அன்று தெரியாது.
என்னைப்பற்றி
அறிந்து வெள்ளக்குட்டைக்கு வந்தார்.
சென்னையில் உள்ள தம் இல்லத்திற்கு வருமாறு அழைத்தார்.
சிறுகச்சிறுக
வளர்ந்த அந்த நட்பில் அவர் நாடகம் எழுதி கே.ஆர்.விஜயாவை ஒரு பாத்திரமாக நடிக்க
வைத்த கதையும்,
தி.மு.கவின் ஐம்பெரும்தலைவர்களில்
ஒருவராய் விளங்கிய மதியழகனுடன் இருந்த நட்புரிமையோடு கூடிய நெருக்கமும் பின்னால்
தான் நான் அறிந்தேன்.
வாழ்க்கையோடு
போராடிய வகையில் அவருக்கும் எனக்கும் ஓர் ஒற்றுமை..
அவரும் ஒரு துணிக்கடை ஊழியனாக பணிக்கால வாழ்க்கையைத் தொடங்கினார். நானும் அப்படியே
ஒரு துணிக்கடை ஊழியனாகத்தான் என் பணிக்கால
வாழ்க்கையைத்தொடங்கினேன். அவர் வாணியம்பாடித் துணிக்கடை. நான் திருப்பத்தூர்த் துணிக்கடை .அது நீடிக்கவில்லை.
ஓர்
எழுத்தாளனுக்கு வேண்டிய எல்லா வாழ்க்கை அனுபவங்களையும் பெற்றிருந்த மு.செல்வராசன்
எழுத நேரமில்லாததால் பதிப்பாளரானார்.
நூல் பதிப்புத் தொழிலுக்கு அறுபது முதல் எண்பது(1970-80) வரை உள்ள காலகட்டத்தில் நூலகங்களில் எந்தக்
கமிஷனும் வாங்காமல், யார் சிபாரிசும் இன்றி ஆயிரம் நூல்கள்
வாங்கினார்கள். கரும்பலகைத்திட்டம், அறிவியல்
நூல்கள் வாங்கும் திட்டம் என்று ஆயிரக்கணக்கில் நூல்கள் வாங்கப்பட்டன.ஒரே செக்காக
தொகை வழங்கப்பட்டது.
அப்போது தான் தமது
மகளின் பெயரால் தமிழரசி பதிப்பகம் என்ற பதிப்பகம் தொடங்கினார்.மிகவும் சிரமப்பட்ட
காலம் மாறி ஒரு வாழ்க்கை நிரந்தரம் கண்டார்.
மு.செல்வராசனிடம்
என்னை ஈர்த்த முக்கியப்பண்பு சுயமரியாதை.
அடிக்கடி அவர் செய்த தொழில்கள் மாறிக்கொண்டே இருந்தன. ஆனால் ஒவ்வொரு தொழில் மாற்றத்தின்
பின்னணியிலும் அந்த சுயமரியாதையே காரணமாக இருந்தது. அவரது
போராட்ட குணத்தை வளர்த்தது. நூலகத்திற்கு நூல்கள் விநியோகம் செய்ததில் அரசினர் செய்த குழப்பத்தால் நேர்ந்த இழப்பீட்டிற்கு நூலக இயக்ககத்தின் மீதே
வழக்குத்தொடுத்தார். எவரிடமும் தலைவணங்காத அந்தப் பண்பு இன்றளவும் எந்தப்
பதிப்பாளரும் செய்யத்துணியாத செயல் அது.
அடுத்தது தான்
வளர்ந்தது போல் பிறரும் வளரவேண்டும் என்ற அவரது நல்லெண்ணம் மிகவும் அரிது .தாம்
பதிப்பாளரான பின் என்னையும் பதிப்பாளர் ஆக்கினார். தம் நண்பர்களை, தம்மிடம் பணியாற்றிய ஊழியரை, தம் தம்பியை பதிப்பாளர் ஆக்கினார்.அச்சகங்களை, ஓவியரை, பிளாக்
மேக்கர்களை பைண்டர்களை, அறிமுகம் செய்துவைத்தார். எந்தப்பிரதி
பலனையும் எதிர்பார்க்காத அந்தப் பெருங்குணம், ஒரு
நூல் வாங்காமல் விடப்பட்டிருந்தால் இயக்குநரோடு சந்திக்கச்செய்து நூலின் அருமையை
எடுத்துக்கூறி வாங்க வைத்தது.
நல்ல எழுத்தின்
அருமை உணர்ந்து அதைப்பாராட்டுவதில் அவர் ஒருநாளும் தயங்கியதில்லை.
எந்தப்பதிப்பாளரும் தான் வெளியிடும் நூலாசிரியரின் நூலுக்கு சிறப்பான ஒரு முன்னுரை
தருவதில்லை. ஆனால் அவர் அதைச்செய்தார்.தீக்குளிக்காத விட்டில்கள் என்ற நூலுக்கு
அவர் எழுதியது பதிப்புரை அல்ல. முன்னுரை. அதில்-
“இலக்கியம் என்பது வாழ்க்கையை -
சமுதாயத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி. அவை கற்பனையில் சிருஷ்டிக்கும் கதைகளே
எனினும், நிதர்சனங்களை உள்ளடக்கிய உயிர்ப் படைப்புக்கள்
ஆகிவிட்டால் காலத்தையும் வென்று நிற்கின்றன.
தீக்குளிக்காத
விட்டில்கள் எனும் இந்நூல் இன்றைய
இளைஞர்களின் வாழ்க்கைச் சித்திரத்தை விவரிக்கும் ஓர் அருங்காவியமாகும். இதில்
வரும் கார்த்தி, சுபா, ரத்னா போன்ற உயர் பாத்திரங்கள் மூலம்
ஆசிரிய நண்பர் திரு. வையவன் அவர்கள் இலட்சோப லட்சம் இளைஞர்களை அவர்களின்
எதிர்பார்ப்புகளை, ஏமாற்றங்களை, நிராசைகளை,கோஷங்களால்
கவரப்படும் அவர்கள் மனப்பான்மைகளை - பின்னடைவுகளை - ஆத்மார்த்த உணர்வுகளைப் படம்
பிடித்துக் காட்டுகிறார்.
கதை
என்கின்ற பெயரில் கன்னியர்களை துகிலுரிந்து, பாலுணர்வுகளையும், கூடிக்களிக்கும்
களியாட்டங் களையும், மிருக வேட்கைகளையும் தூண்டி - மிகைப் படுத்தி
நாசகரமான ஓர் சித்திரத்தை நம்பிக்கையற்று அலையாடிக் கொண்டிருக்கும் இளைஞர்களிடையே
பரப்பி, ‘இதுதான் மகத்தான இன்பம் - இதுதான் வாழ்வின்
லட்சியம்’ என்ற மாயத்தோற்றத்தை உருவாக்கி, ‘இப்படி
எழுதுவதுதான் உண்மையான இலக்கியம்’ என்று தங்கள் ‘புல்லுருவி’ தனத்தை
நியாயப்படுத்திக் கொண்டிருக்கும் எண்ணற்ற ‘பெரிய எழுத்தாளர்கள்’ மலிந்துவிட்ட
ஓர் காலக் கட்டத்தில் வையவன் அவர்கள் தனித்து காணப்படுகிறார்.
அவருடைய
படைப்புக்கள் ஆக்கும் சக்தி பெற்றவை - அழிப்பவையல்ல. நீண்ட நெடு நோக்கும், தீர்க்கமான
சிந்தனையும், ஒப்புயர்வற்ற சமுதாயக் கண்ணோட்டமும் கொண்ட
அவருடைய எழுத்துக்களில் ஜீவன் ததும் கூழாங்கல்லையும் வைரமாக்கும் ரஸவாதம் கைவரப்
பெற்றவர் அவர். தன் படைப்புகளில் மனிதனை மனிதனாக - மாற்றுக் குறையாத தங்கமாக
உயர்த்துகிறார். மனிதனில் தெய்வத்தைக் காட்டுகிறார். வாழும் நெறிகளை - முறைகளை
வகைப்படுத்துகிறார். ராமனின் கால்பட்ட கல் அகல்யையாக உயிர்ப்பது போல், அவர் கைவண்ணத்தில் உருவாகும் பாத்திரங்கள்
உயிரும் ஒளியும் சத்தியமும் நம்பிக்கையும் கொண்ட புதிய வார்ப்புகள்.
இதுதான்
அவருடைய ஆதர்சம். இதுதான் அவருடைய எழுத்து வன்மை. இதுதான் அவருடைய தனித்துவம்.
இதுதான் அவர் சிருஷ்டியின் மகோன்னதம். இதுதான் அவர் வெற்றி. மொத்தத்தில் இதுதான்
வையவன்.
பண்பையும்
அன்பையும் ஒரு கண்களாகக் கொண்டு, எளிமையும் அமைதியுமாக வையவன் அவர்களின் படைப்புகளைக் காணும்போது, மராட்டியத்தின் எங்கோ ஓர் சிற்றூரில் ஆசிரியராக
ஆடம்பரமற்று வாழ்ந்து, தன் படைப்புகளின் மூலம் மகோன்னத
நிலைக்கு உயர்ந்த காண்டேகரின் நினைவு வருகிறது. இவ்விருவருக்கும் உள்ள ஒற்றுமை
தொழில் மட்டுமல்ல - படைப்பாற்றலும் கூடத்தான்.ஆசிரியரின் படைப்பாற்றலை முழுதும்
வெளிப்படுத்தி காலம் அவரை ஓர் ‘தென்னாட்டு
காண்டேகர்’
ஆக்கும். இது எனது வெறும் விருப்பம்
மட்டுமல்ல;
மனமார்ந்த பிரார்த்தனையுமாகும்.
இப்படி எழுத
எந்தப் பதிப்பாளருக்கும் மனம் வராது. அவருக்கு வந்தது. பக்கம் பக்கமாக
எழுதவேண்டிய உறவு அது..அந்த எழுத்தாளர்-
பதிப்பாளர் உறவுக்கும் மேம்பட்ட நட்புறவு. மேலே
நகரவிடாமல் நினைவோடையைச் சற்றே நிற்கவைக்கும் பல சுழல்கள் கொண்டது, மனிதனின் சிறப்பு அவன் மனிதனாக இருப்பதில்
தான் என்று உணர்த்தியது அது.